வெள்ளி, 26 ஜூலை, 2019

விவசாய நிலத்தில் விண்கல்? July 26, 2019

Image
விவசாய நிலத்தில் நெருப்புடன் விழுந்தது விண்கல் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் உள்ள மகாதேவா என்ற கிராமத்தில் கடந்த புதன் கிழமையன்று மதியம் வயல்களில் விவசாயிகள் வேலையில் ஈடுபட்டிருந்த போது வானத்தில் இருந்து நெருப்பு மற்றும் புகையுடன் கூடிய மர்மப் பொருள் ஒன்று பெரும் சத்தத்துடன் திடீரென வந்து விழுந்தது.
மர்ம பொருள் விழுந்த இடத்தில் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது. அங்கு கால்பந்து அளவு கொண்ட கல் ஒன்று விழுந்து கிடந்தது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வருவாய் அலுவலர்களும் காவல்துறை அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு சென்றனர். இந்தக் கல் தற்போது பீகார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் இருந்து பின்னர் ஸ்ரீகிருஷ்னா அறிவியல் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே இது விண்கல்லா என்பது தெரியவரும். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில் கல் பற்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக காணப்படும் பாராங்கல் போலவே விண்கல் காட்சியளிக்கும், இதன் மேற்பரப்பு தீயினால் சுட்டது போல உள்ளது. மென்மையான மேற்பரப்பை கொண்டுள்ளது. 
அண்டவெளி உருவாதல் குறித்து ஆராச்சியாளர்கள் விண்கல் சோதனை மூலமாக தெரிந்து கொள்கின்றனர்.
கடந்த 2016ல் தமிழகத்தின் வேலூர் அருகிலுள்ள நாட்றாம்பள்ளியில் விண்கல் விழுந்ததில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது
credit ns7.tv