வியாழன், 25 ஜூலை, 2019

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டிப்திரியா நோய்! July 25, 2019

credit ns7.tv
Image
தமிழகத்தின் மேற்கு வனப்பகுதிகளில் வேகமாக பரவும் டிப்திரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோயின் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயினை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், நோய் தடுப்பில் மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

Diptheria என்று அழைக்கப்படும் தொண்டை அடைப்பான் நோய் இந்திய வனங்களுக்கு சற்று புதிய வகை நோய் தான். ஆனால் இதன் பாதிப்புகள் தமிழகத்தின் மேற்கு மண்டல காடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது.  பாக்டீரியா பாதிப்பால் உண்டாகும் இந்த நோயின் காரணமாக தொண்டைக்கும், தொண்டைக்கு உள்ளிருக்கும் டான்சில்ஸ் பகுதிக்கும் இடையே பாதிப்பை உண்டாக்குகிறது. காய்ச்சல், வறளும் தொண்டை, உடல் தளர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். உடல் நலன் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும் சற்று தளர்ந்து இருப்பவர்களுக்கு மரணம் ஏற்படக் கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இத்தகைய தன்மைகள் கொண்ட தொண்டை அடைப்பான் நோய் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை அடுத்த கடம்பூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் காணப்படுகிறது. 
தமிழக அரசின் உடனடி தலையீட்டின் காரணமாக வனப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் நோய் பரவலை கட்டுபடுத்த இயலாத ஒரு சூழலே நிலவுகிறது. 

30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ள தொண்டை அடைப்பான் நோய்யை முற்றிலும் தடுப்பதற்கு தொடர் மருத்துவ கண்காணிப்பும், சிகிச்சையும் தேவைப்படும் நிலையில் நோய் வரும் போது மட்டுமே சிகிச்சை என்பது பலன் அளிப்பதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். ஆனால் மலை கிராமங்களில் தடுப்பூசிகள் போட்டு கொள்வதில் மக்களிடம் உள்ள தயக்கமே இந்த நோய் பரவலுக்கு காரணம் என்பது சுகாதாரத் துறையின் வாதமாக உள்ளது. குழந்தைகள் பலர் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் இந்த காரணத்தால் தான் என்கிறார் கோவை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன். 
குழந்தைகளுக்கு தொண்டையில் சவ்வு போன்று உருவாகி உணவு உட்கொள்ளவும், மூச்சுவிடவும் முடியாத நிலையும் ஏற்படும் என்றும், பின்னர் இருதயத்தை தாக்கி இறப்பைக் ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார் அசோகன்.நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும், முறையாக குழந்தைகளுக்கு போடக்கூடிய தடுப்பூசிகளைக் போட பெற்றோர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களைக் அணுக வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர் மருத்துவர்கள்.