ஞாயிறு, 12 டிசம்பர், 2021

அ.தி.மு.க ஆட்சியில் பதிவான மற்றொரு வழக்கிலும் மாரிதாஸ் கைது

 11 12 2021 தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள யூ டியூபர் மாரிதாஸ், மற்றொரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத்தளபதி, அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தனது கருத்தை வெளியிட்ட மாரிதாஸ், திக திமுக ஆதரவாளர்கள் பலரும் இராணுவ தளபதி விபத்தில் மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி (emoji) போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலாகி பரவியதை தொடர்ந்து அரசுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். பாஜகவுக்கு ஆதரவான மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தொண்டர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகினறனர்.

இந்தநிலையில் மோசடி வழக்கிலும் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியின் மூத்த பத்திரிக்கையாளர் அளித்த மோசடி புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஊடகவியலாளர்களை போலி ஆவணங்களை காட்டி அவதூறு செய்த மாரிதாஸ் கைது நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், செய்தி ஊடகங்களின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பித்தும், ஊடகவியலாளர்களை நேர்மையான வகையில் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் என்பவரை, தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. வினய் சரவாஹி அளித்த மோசடி புகாரில் கைது செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

போலியாக மின்னஞ்சலை உருவாக்கி, மோசடி செய்திருப்பதாகவும், அவரது செயலால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் திரு. வினய் சரவாஹி கடந்த 10.7.2020-ம் தேதி அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை புலன் விசாரணை செய்துவந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மாரிதாஸை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

ஊடக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் தான்தோன்றித் தனமாக  அவதூறான வகையில் பேசியும் செயல்பட்டும் வந்த மாரிதாஸின் செயல்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் அப்போதே கண்டனம் செய்திருந்தது. சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவர் மீது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூர்கிறோம். தாமதமானாலும் தற்போதைய இந்த நடவடிக்கை போலியான அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்று நம்புகிறோம்.

தங்கள் நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்காத பத்திரிகையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதும், அவர்களைப் பற்றியும் குடும்பத்தினரைப் பற்றியும் இழித்தும் பழித்தும் பேசுவதுமான போக்கு ஆரோக்கியமானது அல்ல. பத்திரிகையாளர்களை அவர்களது பணியில் இருந்து விலக்குவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கும் போக்கை எவர் ஒருவர் முன்னெடுத்தாலும் அத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

சமூகவிரோத சக்திகளிடம் இருந்து ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் தனிநபர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரது செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். என சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் மாரிதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மாரிதாஸ் மீது குண்டர் சட்டம்… தயாராகிறதா தமிழக அரசு என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுகவின் காவல்துறை, 124 ஏ சட்டப்பிரிவில் மாரிதாஸ் மேல் வழக்கு தொடுக்கின்றனர். திமுகவினர் ராணுவ அதிகாரி இறந்தப்போது, பிபின் ராவத்தை கொன்றவர் யார்? என்றும் ராணுவத்தைக் கேலி செய்தும் , திமுகவின் ஊடகப்பிரிவினரும் திமுகவின் நிர்வாகிகளும் வெளியிட்ட அந்த 300க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளின் பதிவு எங்களிடம் இருக்கிறது.

திக அல்லது திமுகவினர் அவதூறு பரப்பினால் காவல்துறை தன் கண்களை மூடிக் கொள்கிறது. ஆனால் ஒரு தேசியவாதி கருத்துச் சுதந்திரத்துடன் தவறை சுட்டிக்காட்ட விரும்பினால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படுகிறது. திமுக அவதூறு பரப்பியதற்கு நான் ஆதாரம் தருகிறேன். நடுநிலையாக அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடுக்க மாநில அரசு தயாரா?

தமிழக டிஜிபியின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக மாறிப் போனது. ராணுவத்தின் உயர் அதிகாரி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை கிண்டல் செய்து ட்விட்டரில் செய்திகள் வெளியிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா டிஜிபி. அந்த செய்திகளெல்லாம் அவர் கண்ணில் படவில்லையா?

ஊடகவியலாளர் மாரிதாஸ் மீது கம்ப்ளைண்ட் கொடுத்தது யார்? அரசு அதிகாரியா? அல்லது காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிந்ததா? திமுகவின் ஊடகப் பிரிவில் இருப்பவர்களின் புகார்களை கையிலெடுத்து மாரிதாஸ், கல்யாணராமன் போன்றோரையெல்லாம் கைது செய்து ஆளும் கட்சியின் ஏவலராக போலீஸ் செயல்படுகிறது.

மாரிதாஸை விசாரித்த நீதிபதி போலீசிடம் கேட்டதென்ன… இதெல்லாம் ஒரு கேஸா… பேச்சு எழுத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறதா என்று நீதிபதி எதிர் கேள்வி கேட்டுள்ளார். மாரிதாஸ் போட்ட செய்தியில் என்ன தவறு இருக்கிறது.

திமுகவினர் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும். சிஆர்பிசி சட்டம் தமிழகத்திற்கு மட்டுமான சட்டமல்ல… பாஜக 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் இந்தச் சட்டம் செல்லும். முன்னுதாரணமாக நீங்களே மாரிதாஸ் மீதும் குண்டர் சட்டத்தை ஏவி இருக்கிறீர்கள். இதை திமுகவினருக்கு நான் ஒரு எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. இதை எல்லாம் பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/youtuber-maridhas-arrested-another-case-381955/

Related Posts: