3 08 2022

5ஜி அலைக்கற்றை ஏலம் ரு. 5 லட்சம் கோடிக்கு போகும் என்று மத்திய அரசே கூறியிருந்தது. ஆனால், ரூ. 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது. இதில், எங்கு தவறு நடந்தது. மத்திய அரசு நான்கைந்து நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததா என்று திமுக எம்.பி ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்றன. அலைக்கற்றை ஏலம் 7வது நாளாகத் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக சுமாா் 40 சுற்றுகள் நடைபெற்ற இந்த ஏலம் திங்கள்கிழமை பிற்பகல் நிறைவடைந்தது.
5ஜி அலைக்கற்றை ஏலம் திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. ஆ. ராசா, “5ஜி ஏலமானது ரு. 5 லட்சம் கோடிக்கு போகும் என்று மத்திய அரசே கூறியிருந்தது. ஆனால், தற்போது ரூ. 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது. இதில், எங்கு தவறு நடந்தது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி ஆ ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது: “மெகா ஹெட்ஸுக்கும் ஜிகா ஹெட்ஸுக்கும் 10 மடங்குக்கும் மேல் வித்தியாசம் இருக்கிறது. 2ஜியில் குரல் மட்டுமே போகும், 3ஜியில் வீடியோ அனுப்பலாம், 4ஜி அதை விட வேகமாக செயல்படும், 5ஜி அதை விட மிக வேகமாக இருக்கும்.
வெறும் 30 மெகா ஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றையை டிராயின் பரிந்துரைப்படி கொடுத்தபோது 1.76 லட்சம் கோடி ரூபாய் நட்டம் என அன்றைக்கு இருந்த தலைமை தணிக்கை அதிகாரி ரிப்போர்ட் கொடுத்தார்.
5ஜி அலைக்கற்றை ரூ 5 முதல் 6 லட்சம் கோடிக்கு மேல் விற்பனையாகியிருக்க வேண்டும். மத்திய அரசே 5 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்று கூறியிருந்தது, ஆனால் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு தான் விற்பனையாகியிருக்கிறது. எஞ்சிய பணம் எங்கு சென்றது என்பது குறித்து பாஜக அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய அமைச்சர் இது போதுமானது (good enough) என்கிறார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை.
திட்டமிடுதலில் மோசம் நடந்திருக்கிறதா, அல்லது நான்கைந்து நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு மத்திய அரசு கூட்டு சதி செய்ததா என்பதை இனி தான் விசாரிக்க வேண்டும்.
2ஜி விவகாரத்தை பொறுத்தவரை அப்போதிருந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக வினோத் ராய் என்ற தனிமனிதனை பயன்படுத்தி அவரது சட்ட அமைப்பான சிஏஜியை பயன்படுத்தி பொய்யாக வழக்கு புனையப்பட்டது. இது பற்றி எனது புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளேன். இது குறித்து வினோத் ராயிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-a-raja-criticized-the-central-government-over-the-5g-spectrum-auctions-489017/