
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க, மானியமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று, அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, இந்த திட்டம் ஜெயலலிதா பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மானியம் பெற ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்பதால், ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதற்காக, போக்குவரத்து அலுவலகங்களை நோக்கி, பெண்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் பெற பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்து விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை 3 மடங்காக உயர்ந்துள்ளது.
விண்ணப்பித்தக்கவர்கள்:
நிறுவனப்பணி மற்றும் முறைசாரா பணியில் உள்ள பெண்கள், சொந்த கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பணிபுரியும் பெண்கள், பெண் வங்கி வழி நடத்துனர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருமான தகுதி, ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மிகாமல் இருக்கும் பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற பெண்கள் , இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர் , தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருசக்கர வாகன உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டையின் நகல், 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்கான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருசக்கர வாகனத்தின் விலை ஒப்பந்தப்புள்ளி போன்றவற்றை சமர்பிக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், மனுக்களை பெற்று, பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது