
தன்னுடைய இறந்த மகளின் நினைவாக தான் பணியாற்றி வரும் பள்ளியில் உள்ள 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வருகிறார் கிளார்க் ஒருவர்.
கர்நாடக மாநிலம் கல்புர்கி நகரில் உள்ள மக்டம்புரா பகுதியில் உள்ளது MPHS அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் படித்து வரும் ஏழை மாணவிகளின் கல்விச் செலவை அதே பள்ளியில் பணியாற்றி வரும் கிளார்க் ஒருவர் ஏற்றுள்ளார். இந்த ஆண்டு அவர்களின் பள்ளிக் கட்டணத்தை அவரே செலுத்தியுள்ளார்.
பசவராஜ் என்ற அந்த கிளார்கின் மகளான தானேஸ்வரி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். அவரின் நினைவாக அவரின் பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகள் 45 பேரின் கல்விச் செலவை ஏற்றுள்ளதாக பசவராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அப்பள்ளியில் படித்து வரும் பாத்திமா என்ற மாணவி கூறுகையில், பசவராஜ் அவர்கள் அவரின் மகளின் நினைவாக ஏழ்மையின் பிடியில் சிக்கியிருக்கும் என் போன்ற மாணவிகளின் கல்விச் செலவை ஏற்றுள்ளார். அவரின் மகளின் ஆண்மா சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறினார்.
கிளார்க் பசவராஜின் இச்செயலை பள்ளி மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.