புதன், 18 ஜூலை, 2018

தமிழ்நாடு பிறந்த கதை! July 18, 2018

Image


மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நிலப்பரப்பை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்ய வித்திட்டவர் தியாகி சங்கரலிங்கனார் .தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரிக்கைக்காக உண்ணாவிரதத்திலயே உயிர் துறந்த சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு அண்ணா முதல்வரானதும் உயிரூட்டினார் . 1967ம் ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு பிறந்த கதையை விவரிக்கிறது.

உயிர் பெரிதன்று, மானமே பெரிது” என்ற லட்சிய முழக்கத்தோடு ''மெட்ராஸ் ஸ்டேட்'' என்ற மாநில பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார். விருதுநகரை சேர்ந்த சங்கரலிங்கனார் காந்தியின் தண்டியாத்திரையில் பங்கேற்றவர், விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர் .  இந்நிலையில் தான் மொழி வழி மாநிலம் அமைக்கவேண்டும், சென்னை மாகாணம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிட வேண்டும், ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து விருதுநகர் தேசபந்து திடலில் 1952 ம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தை சங்கரலிங்கனார் தொடங்கினார். 

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், காங்கிரஸ் தலைவர் கக்கன், ம.பொ.சிவஞானம், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார். 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் சங்கரலிங்கனார் உயிர் நீத்தார். அதன்பின்னர் 1957ம் ஆண்டு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து 127 வாக்குகள் பதிவாகின. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வியடைந்த நிலையில் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் பூபேஷ் குப்தா தமிழ்நாடு  பெயர் மாற்றம் கோரி தனி தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார் . இதனை ஆதரித்து  அண்ணா தமிழ்நாடு என ஏன் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் .  ஆனால் அந்த தனித் தீர்மானம் நிறைவேறவில்லை. 

காமராஜருக்கு பிறகு பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலகட்டத்திலும் திமுக தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை கொண்டு வந்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்றால் அனைவருக்கும் பரிட்சயம் , தமிழ்நாடு என்பதை இனிதான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .சர்வதேச அரங்கிலும் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரே அனைவரிடமும் அறியப்பட்டுள்ளது என்றெல்லாம் ஐயப்பாடுகள் எழுப்ப்பட்டு விவாதத்தோடே அந்த தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. 1967 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று  திமுக ஆட்சியை பிடித்து அண்ணா முதல்வரானார் . அப்போது தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியதாக அன்றைய அவைத்தலைவர் சி.பா.ஆதித்தனார் அறிவித்தார் . தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் ம.பொ.சிவஞானம் போன்றோரின் தொடர் முயற்சிகளையும்  நினைவு கூர்ந்தார் முதலமைச்சர் அண்ணா. அண்ணா ''தமிழ்நாடு'' என்று சட்டமன்றத்தில் மூன்று முறை முழங்க உறுப்பினர்கள் ''வாழ்க'' என்று ஓங்கி குரல் எழுப்பினார்கள். அந்த குரல் காற்றில் கரைந்து சட்டமன்றத்துக்கு எதிரே இருக்கும் வங்க கரையில் உணர்ச்சிப் பொங்க எதிரொலித்தது.