புதன், 22 மே, 2019

தமிழகத்தில் எத்தனை சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்? May 22, 2019

Image
தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்த மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் எத்தனை சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்பதை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அதிகபட்சமாக 34 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 32 சுற்றுகளாக எண்ணப்படும். 
கோவை மக்களவைத் தொகுதியில் 30 சுற்றுகளாகவும், ராமநாதபுரம், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளில் 28 சுற்றுகளாகவும், திருப்பூர், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகளில் 26 சுற்றுகளாகவும், திருச்சி, விழுப்புரம், சிவகங்கை, சேலம் மக்களவைத் தொகுதிகளில் 25 சுற்றுகளாகவும், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், கரூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதிகளில் 24 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 
நாமக்கல், நீலகிரி, தருமபுரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், ஆரணி, சிதம்பரம், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் 23 சுற்றுகளாக வாக்குகளை எண்ணும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதிகளில் 22 சுற்றுகளாகவும், கடலூர், தூத்துக்குடி, தென்சென்னை மக்களவைத் தொகுதிகளில் 21 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. 
தமிழகத்தில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் மட்டும் 19 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் பூந்தமல்லியில் மட்டும் அதிகபட்சமாக 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஓசூரில் சட்டமன்றத் தொகுதியில் 26 சுற்றுகளாகவும்; சூலூர் சட்டமன்றத் தொகுதியில் 24 சுற்றுகளாகவும்; ஆண்டிபட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 
திருவாரூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர், பெரம்பூர், சோளிங்கர், பரமக்குடி மற்றும் பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தஞ்சாவூர், சாத்தூர், குடியாத்தம் தொகுதிகளில் 21 சுற்றுகளாகவும்; ஓட்டப்பிடாரம், நிலக்கோட்டை, விளாத்திகுளம் தொகுதிகளில் 19 சுற்றுகளாகவும்; அரவக்குறிச்சி, ஆம்பூர்  தொகுதிகளில் 18 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன