வெள்ளி, 24 மே, 2019

நீண்ட இழுபறிக்கு பின் வெற்றியை கைப்பற்றிய திருமாவளவன்...! May 24, 2019

Image
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி பெற்றார். 
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனும் மாறி மாறி முன்னிலை வகித்ததால் பரபரப்பு நிலவியது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஒருவரையொருவர் முந்திச் சென்றனர். பெரும்பாலான சுற்றுக்கள் முடிவில், திருமாவளவன் பின்னடைவு சந்திக்க நேரிட்டது. இதனால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 
இந்நிலையில் கடைசி சுற்றில், திருமாவளவன் வெற்றி பெற்றார். மொத்தம் 4 லட்சத்து 98 ஆயிரத்து 401 வாக்குகளை பெற்ற திருமாவளவன், 2 ஆயிரத்து 969 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திசேகர் 4 லட்சத்து 95 ஆயிரத்து 432 வாக்குகள் பெற்றார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சமூக நீதியின் பாதையில் தமிழகம் பயணிக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டார்.