வியாழன், 16 மே, 2019

ஆளுநர் தாமதித்தால் குற்றவியல் சட்டபடி தமிழக அரசே 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தல்...! May 16, 2019

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சஞ்சய் தத் - பேரறிவாளன் விவகாரத்தில், மத்திய அரசு இரட்டை அளவுகோல்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். தகுதியே இல்லாத சஞ்சய் தத்தை விடுதலை செய்வதும், சட்டப்படி அனைத்து தகுதிகளும் இருந்தும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றும் ராமதாஸ்  குறிப்பிட்டுள்ளார். 
இதனைக் கவனிக்கும் போது, தண்டனைக் குறைப்புகளும், விடுதலைகளும் சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகின்றனவா? அல்லது தமிழர்கள் - தமிழர் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றனவா? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
இந்த விவகாரத்தில், 7 தமிழர்களை விரைந்து விடுதலை செய்யும் முடிவுக்கு ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 7 பேர் விடுதலையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி அவர்களை தமிழக ஆட்சியாளர்களே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.