செவ்வாய், 21 மே, 2019

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு! May 21, 2019

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒப்புகை சீட்டை எண்ணும் போது முகவர்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம், திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் அளித்த மனுவில், வாக்கு எண்ணிக்கை நாளன்று கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு சுற்று முடிவுகளை வெளியிடும் முன் முகவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். 
இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதிய இடவசதி இல்லாததால் அதை மாற்ற வலியுறுத்தியதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறினார்.