செவ்வாய், 21 மே, 2019

நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வாக்குப்பதிவு...! May 21, 2019

Image
542  மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் சராசரியாக 67 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வாக்குசதவீதம் இது என்றும் ஆணையம் கூறியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு 543 தொகுதிகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 66 புள்ளி 4 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் தற்போது 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று அதைவிட பூஜ்யம் புள்ளி 71 சதவீத வாக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. இது முதல்கட்ட தகவல்தான் என்றும் முழுமையான கணக்கீட்டிற்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை சதவீதம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
2019ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக லக்ஷதீவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக காஷ்மீரில் 29 புள்ளி 4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது வாக்குசதவீதம் அதிகரிப்பில் மத்திய பிரதேசம் முன்னிலை வகிக்கிறது. அங்கு கடந்த தேர்தலைவிட தற்போது 9 புள்ளி 6 சதவீத வாக்குகள் அதிகரித்து 71 புள்ளி 2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்கு சதவீத வீழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் 49புள்ளி 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது அது 20 புள்ளி 3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண் வாக்காளர்கள் வாக்குகளைவிட பெண் வாக்காளர்களின் வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன