வியாழன், 30 மே, 2019

ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு! May 30, 2019

Image
ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார். 
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR Congress கட்சி. இதையடுத்து, விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. 
இதில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 12 மணி அளவில் விழா மேடைக்கு வந்த ஆந்திர ஆளுநர் ESL Narasimhan, ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 
ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில், YSR Congress கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பதவியேற்பை அடுத்து, விழா மேடையில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்களின் பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.