புதன், 15 மே, 2019

அட்லாண்டிக் பெருங்கடலை விமானத்தில் தனியாக கடந்து உலகசாதனை படைத்த இந்தியப்பெண்! May 14, 2019


Image
ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடலை இலகு ரக ஸ்போர்ட்ஸ் விமானத்தில் (Light sports Aircraft - LCA) தனியாளாக கடந்து உலக சாதனை படைத்துள்ளார் மும்பையைச் சேர்ந்த 23 வயதான பெண்மணியான Aarohi Pandit.
கேப்டன் Aarohi Pandit, மும்பையைச் சேர்ந்த இவர் அட்லாண்டிக் பெருங்கடலை தனியாளாக LCA விமானத்தில் கடந்து குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விமான போக்குவரத்து வட்டாரத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை (மே 13-14) வரை 3,000 கிமீ நீளமுள்ள பனிப்பாறைகள், மோசமான சீதோஷ்னம் நிறைந்த மிகவும் ஆபத்தான கடல்பரப்பை ஆரோஹி கடந்துள்ளார். ஸ்காட்லாந்தின் wick விமானத்தளத்தில் இருந்து தனது பயணத்தை நேற்று நள்ளிரவு தொடங்கிய இவர் கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் எரிபொருளுக்காக தரையிரங்கி தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
மேலும் கிரீன்லாந்தின் ஆபத்து நிறைந்த பனிப்பாறைகளை தனியாளாக இலகு ரக விமானத்தில் கடந்து புதிய உலக சாதனையையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார்.
மகளிருக்கான அதிகாரமளித்தல் நிகழ்ச்சியின் கீழ் Aarohi Pandit மற்றும் அவரது தோழியான Keithair Misquitta ஆகியோர் தங்களது சிறிய ரக விமானத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். ஒரு ஆண்டு முழுவதும் நீண்ட தூர விமானப் பயணங்களை முடித்துவிட்டு வரும் ஜூலை 30ல் தாயகம் இருவரும் திரும்புகின்றனர்.
புல்லட் மோட்டார்சைக்கிளுக்கு இணையான சுமார் 400கிலோ எடை கொண்ட ஒற்றை இஞ்சின் கொண்ட Sinus 912 என்ற விமானத்தில் இவர்கள் பயணித்தனர். இந்தியாவின் விமான போக்குவரத்து ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் Light sports Aircraft - LCA விமானம் இது என்பது மேலும் சிறப்புக்குரியதாகும்.
முன்னதாக மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்ற இவர்கள் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வழியாக பாகிஸ்தானில் இவர்கள் தரையிறங்கினர். 1947க்கு பிறகு தனிநபர் LCA விமானம் அங்கு தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். அங்கிருந்து பின்னர் ஈரான், துருக்கி, செர்பியா, ஸ்லோவேனியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு அவர்கள் பயணித்தனர்.