வியாழன், 23 மே, 2019

தேர்தல் முடிவுகள் எதிரொலி: வாக்கு எண்ணும் மையத்தில் காங்கிரஸ் தலைவர் அதிர்ச்சியில் மரணம்! May 23, 2019


Image
பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் தேர்தல் முடிவுகளை அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டத்தின் காங்கிரஸ் மாவட்டத் தலைவரான ரத்தன் சிங் தாகூர், இவர் போபால் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் காங்கிரஸ் பிரதிநிதியாக இருந்தார்.
இந்நிலையில் காலை முதலே முன்னணி நிலவரம் தெரியவந்தது. இதில் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்ததையடுத்து ரத்தன் சிங் தாகூர் அதிர்ச்சியடைந்தார். நெஞ்சுவலியால் துடித்த அவர் திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளார்.
இவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும் அவர் மருத்துவமனையில் பரிதாபமாக மரணமடைந்தார். தேர்தல் முடிவுகளை அறிந்து அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பால் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உயிரிழந்திருப்பது காங்கிரஸ் தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
போபால் தொகுதியில் பாஜகவின் பிரக்யா சிங் தாகூரை எதிரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் போட்டியிட்டார். திக் விஜய சிங்கை விட 50,000க்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.