திங்கள், 27 மே, 2019

மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் தொடரும் காட்டுத் தீ! May 27, 2019

Image
சங்கரன்கோவில் அருகே மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
பொதுவாக கோடைகாலம் தொடங்கினாலே மலைகள் மற்றும் காடுகள் நிறைந்த பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் காட்டுத்தீ பரவுவது என்பது வாடிக்கையான ஒன்றாகும். பல நேரங்களில் இது போன்ற காட்டு தீ ஏற்படுகின்ற பொழுது பெரிதும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் சேதம் ஏற்படுவதில்லை. 
சில நேரங்களில் மனிதர்கள் யாரேனும் மலைப்பகுதிகளில் சுற்றுலாவோ அல்லது மலையேறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது குரங்கணி தீ விபத்து.  மேலும், குறிப்பாக இதுபோன்ற நேரங்களில் மனிதர்களை காட்டிலும் விலங்குகளின் நிலமை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை, கரடி, மான், மிளா, உடும்பு, காட்டுமாடு உட்பட பல அரிய வகையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் உள்ளன. செல்லுப்புலி, நாரணாபுரம் வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இப்பகுதியில் காற்று பலமாக அடித்து வருவதால் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. 
இதனால் பல்வேறு அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை வைத்து காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.