
நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் குஜராத் சட்டப் பேரவைக்கு முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. படேல் சமூதாய இட ஒதுக்கீட்டுக்காக போராடி வரும் ஹர்திக் படேலுடன் காங்கிரஸ் கைகோர்த்திருப்பதால், 22 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் பாஜகவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி ஆகியோர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல்வர் விஜய் ரூபானி போட்டியிடும் மேற்கு ராஜ்கோட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சக்திசிங் கோஹில் போட்டியிடும் மாண்வி தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளில் வரும் 14-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.