செவ்வாய், 20 மார்ச், 2018

வி.கே. சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்! March 20, 2018

Image

வி.கே.சசிகலாவின் கணவரும், 'புதியபார்வை' இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதன் பின்னர் உடல்நலம் தேறிய நடராஜனுக்கு மருத்துவமனையிலேயே ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி நடராஜன் வீடு திரும்பினார். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் நடராஜனுக்கு, கடந்த 17ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட நோய்தொற்றிற்காக  தீவிர சிகிச்சை பிரிவில், நடராஜனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில், நள்ளிரவு 1.35 மணியளவில் நடராஜனின் உயிர் பிரிந்தது. இதனையடுத்து, எம்பார்மிங் செய்வதற்காக, அவரது உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில், இன்று காலை 11 மணி வரை நடராஜன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக  நடராஜன் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள விளாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.