புதன், 19 ஜூன், 2019

ஆந்திராவில் இனி காவலர்களுக்கு வார விடுமுறை : ஜெகன் மோகன் ரெட்டி June 19, 2019

ஆந்திராவில் இனி காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.  
ஆந்திரப்பிரதேசத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் அதிரடியாக பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ஆந்திர காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 
ஆந்திரா போலீஸ்
இதுகுறித்த ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய திட்டத்தின் மூலம், 67 ஆயிரத்து 804 காவலர்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் காவலர்களுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு 15 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டார் ஜெகன் மோகன். இதுமட்டுமல்லாமல், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள் அகற்றப்படும் எனவும் தெரிவித்தார். ஆந்திராவில் அதிரடி காட்டி வரும் ஜெகன் மோகன் ரெட்டியை பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.  

Related Posts: