செவ்வாய், 18 ஜூன், 2019

எம்.பிக்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இன்றைய தினம் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.பிக்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்த வகையில், இன்று தமிழகத்திலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.பிக்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். தமிழக எம்.பிக்கள் அனைவரும் தமிழிலேயே பதவிப்பிரமாணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, திமுகவைச் சேர்ந்த கனிமொழி, பதவிப்பிமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது பின்னர் வாழ்க தமிழ்.. வாழ்க பெரியார் எனக் கூறினார். அப்போது பாஜக எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தினை எழுப்பினர். அதேபோல், விசிக தலைவர் திருமாவளவன், வாழ்க அம்பேத்கர்.. வாழ்க பெரியார், வெல்க சமத்துவம் எனக்கூறி பதவியேற்றுக்கொண்டார்.
மேலும், தர்மபுரி மக்களவை உறுப்பினரான மருத்துவர் செந்தில்குமார் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு திராவிடம் வெல்க எனக்கூறி பதவியேற்றுக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த எம்.பி வெங்கடேசன், தமிழ் வாழ்க.. மார்க்சியம் வாழ்க என்று கூறி பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதிமுகவைச் சேர்ந்த எம்.பி ரவீந்திரநாத் குமார், எம்.ஜி.ஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என கூறி பதவியேற்றுக்கொண்டார்.  ரவீந்திரநாத் பதவியேற்றுக்கொண்டபோது பாஜக எம்.பிக்கள் ஆரவாரம் செய்தனர்.மேலும்,பாரிவேந்தர் தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என கூறி பதவியேற்றுக்கொண்டதுவும் குறிப்பிடத்தக்கது.