சனி, 15 ஜூன், 2019

கோவையைச் சேர்ந்த ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேர் கைது...! June 15, 2019

Image
தற்கொலை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கோவையைச் சேர்ந்த ஐ.எஸ். ஆதரவாளர்கள் மூன்று பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்திருந்ததாகவும், தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறி கோவையைச் சேர்ந்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
அதில் உக்கடத்தைச் சேர்ந்த அசாருதீன் மற்றும் தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஹிதயதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில், கோவையில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், உக்கடத்தைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், கருப்புக்கடையைச் சேர்ந்த ஷேக் சஃபியுல்லா ஆகியோரை உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  
பின்னர், மூன்று பேரையும் கோவை பந்தய சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதி சக்திவேல் வீட்டில் இன்று ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மூன்று பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிறையில் உள்ள ஷேக் சஃபியுல்லா, ஏற்கெனவே கைதான ஹிதயதுல்லாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.