வியாழன், 27 ஜூன், 2019

15வது நிதிக்குழு ஆணையம்: புறக்கணிக்கப்படுகிறதா தென்னிந்தியா? June 27, 2019


Image
15வது நிதிக்குழு ஆணையத்தில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் ஒருவர்கூட இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே நிதி சார்ந்த உறவுகளை நிர்வகிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் நிதிக்குழு ஆணையம். எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு இருந்தாலும், எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் நிலப் பரப்பளவு, மக்கள் தொகை, தனிநபர் வருமான வித்தியாசம், வனங்களின் வளம் போன்றவற்றுக்கு ஏற்ப நிதி அதிகமாகவும் குறைவாகவும் மாநிலங்களுகிடையே பிரித்துக் கொடுக்கப்படும். 
எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படவேண்டும் என்பதை ஆராய்ந்து நடுநிலையோடு மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதே நிதிக் குழு ஆணையத்தின் முக்கிய கடமை. ஆனால், 2020ஆம் ஆண்டில் இருந்து தன் பணியைத்தொடங்க உள்ள 15வது நிதி குழு ஆணையத்தின் நடுநிலைத் தன்மைமீது தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் 15வது நிதி குழு ஆணையத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை. இதனைச் சுட்டிக்காட்டிய கர்நாடக அமைச்சர் பைரே கவுடா தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்ததோடு மேலும், திறமையானவர்கள் யாரும் தென்னிந்தியாவில் இல்லையா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதேபோல,  2011ம் ஆண்டு மக்கள் தொகை புள்ளி விவரங்களின் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிக்கப்படும் என்று புதிய கமிஷன் விதிமுறையை வகுத்திருக்கிறது. இதனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தில் வெற்றிகண்ட தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு தேவையான நிதி கிடைப்பதில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஜிஎஸ்டிஆல் மாநிலங்களின் நிதி உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில்  நிதி கமிஷனின் இந்த விதிமுறைகளால் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய நிதி கிடைக்காமல் போகும் என்று தன் வாதத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார்... 
ஏற்கனவே இந்த பிரச்சனை குறித்து 2018ம் ஆண்டே கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் புதுச்சேரி மாநில நிதி அமைச்சர்கள் ஒன்று கூடி விவாதித்தனர். அதில், தற்போது நடைமுறையில் இருக்கும், 1971ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நிதியை பகிர்ந்து அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களுக்கு எந்த வகையிலும் நிதி ஆதாரம் மறுக்கப்படக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். நிதிக்குழுவின் புதிய முடிவால் தமிழகமும் கடுமையாக பாதிக்கப்படும் என்றாலும், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.. 
credit ns7.tv