புதன், 26 ஜூன், 2019

வணிகவரித்துறையினரை மிரள வைத்த சமோசா வியாபாரி: ஆண்டு வருமானம் தெரியுமா? June 25, 2019

Image
60 லட்ச ரூபாய்க்கும் அதிக வருமானம் ஈட்டும் கச்சோரி, சமோசா பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் வணிகவரித்துறை அதிகாரிகளின் கழுகுப் பார்வையில் வசமாக சிக்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் சீமா திரையரங்கை ஒட்டி அமைந்துள்ளது ‘முகேஷ் கச்சோரி’ என்ற அந்த தெருவோர கடை. அப்பகுதிவாசிகளிடையே இந்த கச்சோரி கடை மிகவும் பிரபலம். காலையில் வியாபாரத்தை தொடங்கினால் நாள் முழுவதும் நீண்ட வரிசையில் இக்கடையில் கச்சோரி வாங்க கூட்டம் மொய்க்கும்.
கடையின் வருமானம் குறித்து வணிகவரித்துறையில் யாரோ ஒருவர் புகார் அளிக்கும் வரை இந்தக் கடையின் உரிமையாளரான முகேஷ்-க்கு சிறிது நாட்கள் முன்னர் வரை எல்லாம் சரியாகவே போய்க்கொண்டிருந்தது. புகாரை பெற்ற வரித்துறையினர் அவரது கடைக்கு அருகே நின்றுகொண்டு நோட்டம்விடத் தொடங்கினர். அப்போது தான் இக்கடையின் ஆண்டு வருமானம் 60 லட்ச ரூபாய் முதல் 1 கோடி வரை என்று அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்தக் கடையானது ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்படாமல் இருந்ததையும் அவர்கள் அறிந்தனர். இது வரை வணிகவரி கட்டாதது தொடர்பாக உரிமையாளர் முகேஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கடையின் உரிமையாளர் முகேஷ் கூறுகையில், இந்தக் கடையினை சுமார் 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன், இதுவரை இந்த விதிமுறைகள் குறித்து எனக்கு யாரும் கூறியதில்லை, நாங்கள் எல்லாம் வாழ்க்கையை நடத்த அன்றாடம் கச்சோரி, சமோசா விற்பனை செய்யும் சாதாரண மக்கள் என்றார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் மாநில புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முகேஷ் தனது வருமானம் குறித்தும் மூலப் பொருட்கள் செலவீனம் குறித்தும் விரிவாக கூறினார். அவர் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்து ஒரு ஆண்டிற்கான வரியை கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
40 லட்ச ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் ஜிஎஸ்டியின் கீழ் கட்டாயம் பதிவு செய்தாக வேண்டும்