இந்தியா உட்பட மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் தான், மிக மோசமான தண்ணீர் பஞ்சத்துக்கு ஆளாகும் என உலக வளங்களுக்கான ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் பெருநகரங்களான பெங்களூரு, சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருக்காக நீண்ட வரிசையில் இரவு பகல் பாராமல் பொதுமக்கள் காத்துக்கிடக்கவேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. பருவமழை பொய்த்த காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உலக வளங்களுக்கான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை இருப்பதால், எதிர்காலத்தில் இந்தியா மிக மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் என எச்சரித்துள்ளது.
1960க்கு பின் இந்தியாவின் தண்ணீர் பயன்பாடு இரட்டிப்பாகியுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பட்டியலில், இஸ்ரேல், லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
credit ns7.tv