சனி, 24 ஆகஸ்ட், 2019

சுவரில் நாமம் வரைந்து விட்டு, திருடிய பொருட்களை சுவற்றில் எழுதிவிட்டு சென்ற கொள்ளையர்கள்! August 24, 2019

Credit Ns7.tv
Image
மதுரை அருகே அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் கொள்ளையடித்த நபர்கள் அங்கிருந்த சுவரில் நாமம் வரைந்ததோடு திருடிய பொருட்களை வரிசையாக எழுதியும் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து மதுரை மாநகர் கோமதிபுரம் பகுதியில்  அப்பளம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த நிறுவனத்தில் பணம் திருடப்பட்ட நிலையில் அது தொடர்பாக காவல் துறையிடம் எந்தவிதமான புகாரும் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அதே அப்பள கம்பெனியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த கணினி, தராசு, ஒரு லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர். தொடர்ந்து சுவரில் நாமம் வரைந்த கொள்ளையர்கள் எந்தெந்த பொருட்களை கொள்ளையடித்தோம் என்பது குறித்து வரிசையாக எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். 
கொள்ளையர்கள் இரண்டு பேரும் இருசக்கர வாகனங்களில் வந்து கொள்ளையடித்ததோடு பொருட்களை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.