வியாழன், 29 ஆகஸ்ட், 2019

சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பியூஷ் மானுஷ்...!

Image
சேலத்தில் பாஜகவினர் தாக்கியதில் காயம் அடைந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சேலத்தை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ், பொருளாதார மந்த நிலை மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும், தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது பற்றியும் பாஜக-வினரிடம் கேள்வி கேட்க உள்ளதாக முகநூலில் குறிப்பிட்டிருந்தார். 
அதன்படி சேலம் மரவநேரி பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்ற பியூஸ் மானுஷ் அங்கிருந்த பாஜக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கும், பியூஷ் மானுஷுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பியூஷ் மானுஷ் மீது செருப்பு மாலை அணிவித்த பாஜக நிர்வாகிகள், காவல் துறையினர் முன்பே அவரை கடுமையாகத் தாக்கினர்.
இதையடுத்து பியூஷ் மானுஷை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் மானுஷ், பல்வேறு கட்சி அலுவலகங்களுக்கு சென்று விவாதிப்பது போன்று தான், பாஜக அலுவலகத்துக்கும் சென்றதாக கூறினார்.
பல மாதங்களாக தங்கள் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் சிலர் மிரட்டல் விடுத்து வருவதாக, பியூஷ் மானுஷின் மனைவி மோனிகா புகார் தெரிவித்துள்ளார். 

credit ns7.tv