வியாழன், 29 ஆகஸ்ட், 2019

ஹெல்மெட் வழக்கு : அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Image
ஹெல்மெட் வழக்கில், நீதிமன்றம் கேட்கும் விவரங்களை வழங்காத அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக்கோரி, கே.கே.ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 
தமிழகத்தில் 2007ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாய ஹெல்மெட் சட்டத்தை ஓராண்டுக்குள் அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்தபோதும், அதை நடைமுறைப்படுத்த 12 ஆண்டுகள் ஆகியிருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
ஹெல்மெட் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை ஏன் அமல்படுத்தவில்லை? என்பது குறித்து, தமிழக உள்துறை செயலாளரும், ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் பலியானோர் விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாதது குறித்து, சுகாதாரத்துறை செயலாளரும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாவட்ட வாரியாக, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு, டிஜிபிக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  இந்த விவரங்களை வழங்காத அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
credit ns7.tv