செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

வெள்ளத்தால் மூழ்கப்போகிறதா தென் இந்தியா? August 20, 2019


Image
கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த மழைவெள்ள பேரிடர் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா மூழ்க தொடங்கும் என்று ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில், இந்த ஆண்டு பருவ மழைக்காலத்தின் அதிதீவிர தாக்கத்தினால் பல மாநிலங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டமும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு பல உயிர்களை பறிகொடுத்தன. 
பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர். எல்லா வருடமும் இந்தியா சந்திக்கும் இயல்பான பேரிடர் தானா இது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் மேலோங்கி இருக்கின்ற நிலையில் இதற்கு விடையளிக்கும் விதமாக இந்திய வானிலை மாற்றங்கள் குறித்தான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர் காந்திநகர், ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், . 
மாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கண்டறிந்துள்ளனர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் புவி வெப்பமடைதல்தான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு 2.6 டிகிரி செல்சியஸ் முதல் 8.5 டிகிரி செல்சியஸ் வரை பூமி வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது. 
இப்படி பூமி வெப்பமடைதல் அதிகரிப்பதால் தான், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது என்றும், இதன் காரணமாக அதிக மழை பொழிவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பூமி வெப்பமடைவதையும், அதிக அளவிலான கார்பன் வெளியேற்றத்தையும் குறைத்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில், வரவிருக்கும் மழை வெள்ளங்களை தடுக்க முடியும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஒன்றரை டிகிரி செல்சியஸ்க்குள் பூமி வெப்பமடைவது நிறுத்தப்பட்டால் மட்டுமே, ஏற்படவிருக்கும் வெள்ள பாதிப்பில் பாதியையாவது குறைக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். 
மேலும் 1905 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை உள்ள மழைப்பொழிவு விவரங்களை ஆராய்ச்சி செய்து பார்த்த போது, மிதமான மழைப்பெய்யும் நாட்களை விட, மிக அதிக கன மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் கணிசமாக அதிகரித்திருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதிகமான கன மழையையும், வரட்சியையும் ஒருசேர தென்னிந்தியா சந்திக்கவிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வெப்ப நிலை மாற்றங்கள் தென் இந்தியாவில் அதிகம் நடப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதோடு, வலுவிழக்கும் பருவ மழைக்காலமும், அதிகரிக்கும் கன மழை நாட்களும் தென் இந்தியாவில் வரட்சியை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. 

credit ns7.tv