செவ்வாய், 2 ஜூன், 2020

பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க - பள்ளிக்கல்வித்துறை முடிவு

மிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் திறக்கப்படுவது  வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இந்நிலையில் ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள் பள்ளிகள் இயங்க வேண்டியது அவசியம் என்பதால் நடப்பு கல்வியாண்டில் ( 2020 - 2021 ) ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டால், குறைந்தபட்ச வேலை நாட்களை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்வது கடினமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே ஜூலை மாதத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்றால், கொரோனா அச்சம் காரணமாக, தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு ஒருவித தயக்கம் இருப்பதாக அரசுக்கு தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, தற்போதைய சூழலில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் தயாராக இருக்கிறார்களா, அவர்களுக்கு ஏதும் தயக்கம் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்பன உள்ளிட்டவை குறித்து, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும் தலா ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப பள்ளிகல்வி​த்துறை இயக்குநர் கண்ணப்பன் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.