
இந்தியாவில் இருக்கும் மாநில முதல்வர்களின் சொத்துக்கள், அவர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்ததிற்கான கூட்டமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 25 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
திரிபுரா மாநில கம்யூனிஸ்ட் முதல்வர் மாணிக் சர்க்கார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தி ஆகியோர் ஏழை முதல்வர்கள் ஆவர். இவர்களின் சொத்து மதிப்பு முறையே 26 லட்சம், 30 லட்சம் மற்றும் 55 லட்சம் ஆகும்.
இந்தியாவிலேயே பணக்கார முதல்வராக அறியப்பட்டிருப்பவர் சந்திரபாபு நாயுடு. அவரது சொத்து மதிப்பு சுமார் 177 கோடி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு சுமார் 7.80 கோடி சொத்து மதிப்புடன் 12 வது இடத்தில் உள்ளார்.
கிரிமினல் குற்றச்சாட்டுள்ள முதல்வர்கள்:
இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, ஜார்கண்ட், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, பாண்டிச்சேரி, ஜம்மு & காஷ்மீர், பீகார் ஆகிய மாநில முதல்வர்களின் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவர்களில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, ஜார்கண்ட், பஞ்சாப், தெலங்கானா, பீகார் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களா இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ், பினராயி விஜயன், அரவிந்த் கெஜரிவால், அமரீந்தர் சிங், சந்திரசேகர் ராவ், நிதிஷ் குமார் ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, மோசடி, முறையற்ற வகையில் சொத்து சேர்த்தது, குற்றம் செய்யத்தூண்டியது உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் உடைய கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீது 25 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில், 3 குற்றச்சாட்டுகள் தீவிரமான குற்றப்பிரிவின் கீழ் வருபவையாகும்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் முதல்வர்கள் தாக்கல் செய்துள்ள அதிகாரப்பூர்வ வேட்புமனுக்களில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.