திங்கள், 1 ஜூன், 2020

பான் கார்டு வாங்க ... ஆதார் இருந்தால் சிம்பிள்....

Aadhar Card, Pan Card: ஆதார் அடிப்படையிலான KYC மூலம் பான் (PAN) உடனடி ஒதுக்கீடு செய்வதற்கான வசதியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முறையாக அறிமுகப்படுத்தினார். உடனடி பான் அட்டை பெற விண்ணப்பிக்கும் செயல்முறை மிகவும் எளிமையானது என வருமான வரித்துறை டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. பான் எண்ணை உடனடியாக உருவாக்க நீங்கள் வருமான வரித்துறையின் e-filing இணையதளத்துக்கு செல்லலாம்.

செயல்முறை

உடனடி பான் எண் பெற விண்ணப்பிக்கும் செயல்முறை மிகவும் எளிமையானது என வருமான வரித்துறை கூறியுள்ளது. விண்ணப்பதாரர் வருமான வரித்துறையின் e-filing இணையதள முகவரிக்கு சென்று அவரது ஆதார் எண்ணை வழங்க வேண்டும். அடுத்து ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணில் வரும் OTP எண்ணை சமர்பிக்க வேண்டும்.

இதை முடித்தவுடன் ஒரு 15 இலக்க ஒப்புதல் எண் (acknowledgement no) உருவாக்கப்படும். ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கோரிக்கையின் நிலையை எப்போது வேண்டுமானாலும் சரிப்பார்க்கலாம். ஒதுக்கப்பட்டவுடன் மின்னணு பான் அட்டையை பதிவிரக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் மின்னணு பான் அட்டை விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும், என வருமான வரித்துறை கூறியுள்ளது.
மத்திய பட்ஜெட்டின் போது உடனடி பான் வசதி குறித்து நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். செல்லத்தக்க ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட ஒரு கைபேசி எண் வைத்துள்ள பான் விண்ணப்பதாரர்களுக்கு உடனடி பான் வசதி இப்போது கிடைக்கிறது, என நிதி அமைச்சகம் ஒரு அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. ஒதுக்கீடு செயல்முறை காகிதமற்றது மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மின்னணு பான் இலவசமாக வழங்கப்படும்.

2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடி பான் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

வருமான வரித்துறையின் e-filing இணையதளத்தில், சோதனை அடிப்படையில் உடனடி பான் வசதியின் ‘Beta’ பதிப்பு 12 பிப்ரவரி 2020 முதல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்து 6,77,680 உடனடி பான் அட்டைகள் 10 நிமிடங்களில் 25 மே 2020 வரை ஒதுக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை கூறியுள்ளது.