செவ்வாய், 6 மார்ச், 2018

நாளை தொடங்குகிறது 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு! March 6, 2018

Image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. 

தமிழகத்தில் +1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை கடந்தாண்டு அறிவித்தது. 

அதன்படி, தமிழகத்தில் முதன்முறையாக 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவுள்ள பொதுத்தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். 

சென்னையில் மட்டும் 407 பள்ளிகளைச் சேர்ந்த 49 ஆயிரத்து 422 பேர் இத்தேர்வினை எழுதுகின்றனர். இதில், தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் கூடுதலாக ஒரு மணிநேரம் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது. 

தேர்வெழுதும் மாணவர்களின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அடங்கிய முகப்பு சீட்டுகள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும் எனவும், தேர்வர்கள் முகப்பு சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட்டால் மட்டுமே போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.