
செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு, போக்குவரத்தை சீர்செய்யும் தண்டனையை போக்குவரத்து போலீசார் வழங்கினர்.
பொள்ளாச்சி முள்ளுபாடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் தனியார் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் செல்ல பேருந்து ஓட்டி சென்ற போது செல்போன் பேசிய படியே இருந்தார். அந்தப் பேருந்தில் பயணித்த ஒருவர், அதனை செல்போனில் படம் பிடித்து பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இதனிடிப்படையில் ஓட்டுநர் முருகானந்தனை பிடித்து விசாரித்த காவல்துறை, அவருக்கு நூதன தண்டனை வழங்க முடிவெடுத்தது. அதன்படி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்தை சீர்செய்யும் படி முருகானந்தத்திற்கு தண்டனை கொடுக்கப்பட்டது.
அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம், செல்போன் பேசிய படியே வாகனத்தை இயக்க வேண்டாம் என முருகானந்தம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காவல்துறையினரிடன் இந்த நூதன தண்டனைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பொது மக்கள், இன்னும் கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே விதிமீறல்களை தடுக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.