
சந்திராயன் 2 விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தப்படும் என்று, இஸ்ரோ தலைவர் டாக்டர்.சிவன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சரக்கல்விளை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பாண்டில் குறைந்தது 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
குறிப்பாக, டேட்டா ரேட் கொண்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான ஜி சாட் 29, ஜி சாட் 7 மற்றும் அதிநவீன செயற்கை கோள்கள் செலுத்தப்பட உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.
நாவிக் கருவிகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட இஸ்ரோ தலைவர், அக்கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
சந்திராயன் 2 விண்கலம் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் அது விண்ணில் செலுத்தப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் மேலும் தெரிவித்தார்.