
டாக்ஸி உலகின் முன்னோடியாக திகழும் உபர் நிறுவனமும் மற்றும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமுமான நாசாவும் இணைந்து நகர்புறங்களில் பறக்கும் கார் சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு தற்போதுள்ள போக்குவரத்தை மேலும் எளிமையாக்க மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் கார் சேவையை நகர்புறங்களில் தொடங்க திட்டமுள்ளதாக உபர் நிறுவனம் அறிவித்திருந்தது, பின்னர் இந்த திட்டத்தில் நாசாவும் இணைந்து விமான போக்குவரத்து மேலாண்மை பணியை கவனிக்கவுள்ளதாக தெரிவித்தது. தற்போது இந்த திட்டம் அடுத்தக்கட்டதை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் கார் சேவையை பொறுத்த வரையில் 2020ம் ஆண்டு சோதனை ஓட்டம் நடத்த இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. மேலும் 2023 ஆண்டு மக்கள் சேவைக்கு கொண்டு வரவும் வேலை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார் பெரிய ரக ட்ரோன் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு விமானங்கள் போன்று ஓடுதளம் அவசியமில்லை, மாறாக ஹெலிகாப்டர் போன்று நின்ற இடத்திலேயே இருந்து உயரே பறக்கும் தொழில்நுட்பத்தை கொண்டதாகும்.
உபர் நிறுவனத்தின் பறக்கும் கார் சேவை பற்றிய காணொளி
மின்சாரம் மூலம் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், மாசு ஏற்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு தகுந்ததாக இருக்கும் எனக் கனிக்கப்பட்டுள்ளது. பயணிகள் குறிப்பிடும் இடங்களுக்கு எளிமையாகவும், நேரத்தை கட்டுப்படுத்தி விரைவாகவும் இந்த பறக்கும் காரில் பயணிக்க முடியும். தற்போது எவ்வாறு கார்களை புக் செய்ய ஆப் உபயோகிக்கப்படுகிறதோ, அதுபோல இதே ஆப் மூலமாக இந்த சேவையை எளிதில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரம்பக்கட்டத்தில் விமானிகளுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், பின்னர் தானியங்கியாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி நாளடைவில் உலகெங்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் இதுபோன்ற சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாவும் கிடக்கும் என்பதில் சந்தேகமில்லை.