சனி, 15 செப்டம்பர், 2018

புழல் சிறையில் இருந்து 20 தொலைக்காட்சிகள் அகற்றம் September 14, 2018

Image

சொகுசு வசதி சர்ச்சை எதிரொலியாக சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு வகுப்பில் வைக்கப்பட்டிருந்த 20 தொலைக்காட்சி பெட்டிகளை போலீசார் அகற்றியுள்ளனர். 

சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் சிலருக்கு விதிகளை மீறி, சொகுசுப் படுக்கை, மின்விசிறி, டி.வி, டி.வி.டி, நாற்காலிகள், சமையலறை உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செல்போன்கள், உயர் ரக ஷூக்கள், கூலிங் கிளாஸ் சகிதம் சிறையில் கைதிகளில் சிலர்,  சொகுசுவாழ்க்கை வாழ்வதாகவும் புகார் எழுந்தன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா புழல் சிறையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. உயர் பாதுகாப்பு வகுப்பு சிறையில் இருந்த 20 டி.வி.க்கள் அசுதோஷ் சுக்லா உத்தரவின் பேரில் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.