செவ்வாய், 18 செப்டம்பர், 2018

சிறுபான்மையினர்கள் விடுதலையின் முன்னோடி ஆளுமை இரட்டைமலை சீனிவாசன்! September 18, 2018

Image

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவரான இரட்டைமலை சீனிவாசன் 
குறிப்பிட்ட தெருவில் செருப்பணிந்து செல்லக் கூடாது... பெண்கள் மேலாடை அணியக் கூடாது... தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில்களில் நுழையக் கூடாது...  இது தான் 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவின் நிலை... 

இந்த போக்கு தற்போது முற்றிலும் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்றாலும், நவீன ஒடுக்கு முறை தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்திலிருந்து ஒதுக்கியே வைத்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறையை முற்றிலும் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே களமாடிய மனிதர் தான் இரட்டை மலை சீனிவாசன். மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர், இரட்டைமலை சீனிவாசன். 

எந்த பெயரால் இந்திய சமூகம் தம்மை ஒடுக்குகிறதோ அதே பெயரால் சுதந்திரத்திற்காக பாடுபட வேண்டும் என்று அறிவித்து இவர் தொடங்கிய பறையன் இதழ், தமிழ் சமூகத்தில் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. 1893 ஆம் ஆண்டு தொடங்கி 1900 ஆம் ஆண்டு வரை வெளிவந்த பறையன் இதழில், சமூக ஒடுக்கு முறை சார்ந்த பல்வேறு பிரச்னைகளை வெளிச்சமிட்டுக் காட்டினார். பறையன் இதழில் இவர் சுட்டிக்காட்டிய பல விஷயங்கள் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை உரையாடலை பறையன் இதழ், சமூகத்தில் நிகழ்த்தியது.  

தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை சார்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட இரட்டை மலை சீனிவாசன், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1923 ஆம் ஆண்டு சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். இவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளும், தீர்மானங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. சாதிய பாகுபாடின்றி மக்கள் எந்த வீதியிலும் நடக்கலாம். தாழ்த்தப்பட்ட மக்களை, பள்ளர், பறையர் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர்கள் என்று அழைக்க வேண்டும், மது ஒழிப்புத் தீர்மானம், ஆலய நுழைவுத் தீர்மானம் போன்ற சமூக சீர்த்திருத்தங்களை இவர் சட்டப்பேரவையில் எழுப்பி, 2 ஆயிரம் ஆண்டு கால அடிமை விளங்கை உடைத் தெறிய பாடுபட்டார். 

லண்டனில் 1930 - 1931 மற்றும் 1932 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்து கொண்டார் இரட்டை மலை சீனிவாசன்... தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும்... தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இவர் ஆற்றிய உரைகள், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்னையை சர்வதேச கவனம் பெறச் செய்தன.  

இந்து மதம் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குகிறது என்று கூறி, அயோத்தி தாசர், அம்பேத்கர் போன்றவர்கள் பவுத்த மதத்தைத் தழுவிய போதும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மீக மரபுகளைத் தேடுவதில் இரட்டை மலை சீனிவாசன் ஆர்வம் காட்டினார். ஆலயப் பிரவேச போராட்டம் தமிழகத்தில் வீறுகொண்டு பெரும் போராட்டமாக மாறிய போது, தாழ்த்தப்பட்ட மக்களின் முற்காலத்திய உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலய பிரவேசத்தை அவர் ஆதரித்து நின்றார். 

தென்னாப்பிரிக்காவில், 1930 ஆம் ஆண்டு ஹரிஜன சேவா சங்கத்தை  மகாத்மா காந்தி தொடங்கி செயல்பட்ட போது, அவரோடு தாழ்த்தப்பட்ட மேம்பாடு சார்ந்து இரட்டை மலை சீனிவாசன் உரையாடலை மேற்கொண்டார். பல்வேறு அரசியல் சூழல்களில், இந்தியா சிக்கித் தவித்த போது, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை மட்டுமே ஒற்றை நோக்கம் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை மூலமே சமூக விடுதலை சாத்தியம் என்றும் காத்திரமாக நம்பி தன்னை அர்ப்பணித்து பாடுபட்டவர் இரட்டை மலை சீனிவாசன்.