சனி, 15 செப்டம்பர், 2018

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை புரட்டிப்போட்ட ஃபுளோரென்ஸ் புயல்! September 15, 2018

அமெரிக்காவின் வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ஃபுளோரென்ஸ் புயல் பல்வேறு மாகாணங்களைப் புரட்டிப்போட்டுவிட்டு மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு கரோலினா மாகாணத்தில் கரை கடந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

ப்ளோரன்ஸ் புயலால் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் எட்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, 2 முதல் 3 நாட்களில் பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல், மழை காரணமாக வடக்கு, தெற்கு கரோலினாவில் 4 லட்சத்து 40 ஆயிரம் பொதுமக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஒரு வாரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கரோலினாவில் ஃபுளோரென்ஸ் புயலால் பெய்த மழை மட்டுமின்றி, கடலில் எழுந்த சுனாமி அலைகளால் கடல் நீரும் குடியிருப்புகளுக்குள் புகுந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தெற்கு கரோலினாவின் Myrtle கடற்கரையில் மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த புயலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஃபுளோரென்ஸ் புயல் பயணிக்கும் பாதையில் 1 கோடி மக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவருக்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு உடனடியாக முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, விண்வெளியில் இருந்து நாசா எடுத்த வீடியோவில், புயல் மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஃபுளோரென்ஸ் புயலால் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா, ஜார்ஜியா, வாஷிங்டன், மேரிலேண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள், மின் கம்பங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் ஒரு கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Image