ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் - காங்கிரஸ் மூத்த தலைவர்! September 30, 2018

Image

கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் நீதித்துறையை விமர்சித்து கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன், கன்னூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது மேடையில் பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் அவர் பேசும்போது, அண்மையில் கள்ளத்தொடர்ப்பு தொடர்பாக தீர்ப்பு கூறிய நீதிபதி குறித்து கடுமையான முறையில் விமர்சித்தார்.

கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும், 
மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நீதிபதி தனது தீர்ப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும், அவரின் தீர்ப்பு நாட்டின் குடும்ப மதிப்புகளுக்கு எதிரானதாக உள்ளது என்று சுதாகரன் பேசினார்.

மேலும், கலாச்சார மற்றும் குடும்ப அமைப்பின் மீது பெருமை கொண்டுள்ள நாடு இந்தியா, இப்படிப்பட்ட தீர்ப்பை அளித்துள்ளதன் மூலம் இந்தியாவின் குடும்ப மதிப்புகளைப் பற்றி எதையும் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட நீதிபதி அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது என்றும் சுதாகரன் குறிப்பிட்டார்.

குடும்ப மதிப்புகளை உலக நாடுகளுக்கு உணர்த்துவதில் இந்தியர்களாக நாம் பெருமை கொள்கிறோம், இதுவே நமக்கு பெருமை, ஆனால் இப்போது கணவரோ மனைவியோ அவரவர் பாதையில் விலகிச்செல்லலாம். நீதிபதி கண்டிப்பாக மனநிலை பரிசோதை மேற்கொள்ள வேண்டும் என்று சுதாகரன் காட்டமாக கூறினார்.

இதேபோல, சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். மத ரீதியான விவகாரங்களில் தலையிடுவதில் நீதித்துறைக்கு உரிமையில்லை, இவை பலநூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு என சுதாகரன் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கள்ளத்தொடர்பு குற்றமாகாது என 497 சட்டப்பிரிவை ரத்து செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பாலினத்தவருக்கு அடுத்த பாலினத்தவர் அடிபணிதல் என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.