செவ்வாய், 9 அக்டோபர், 2018

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைவிரிப்பு! October 8, 2018

Image


சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியில் இணையப்போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2019ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவிற்கு எதிராக பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்கட்சிகள் இறங்கின. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் இந்த பிரம்மாண்ட கூட்டணிக்கான அச்சாரமாக எதிரும் புதிருமாக விளங்கிய சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் இக்கூட்டணி பெற்றது. இந்நிலையில் 2019 தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் வகையில் இந்த கூட்டணி அமையும் என்று பேசப்பட்டது.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் விளங்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே பாஜவை வீழ்த்த மகாபத்பந்தன் எனப்படும்  பிரம்மாண்ட கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த எதிர்கட்சிகளில் முக்கியத்துவம் பெற்ற கட்சியான பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இணையாது என அதன் தலைவர் மாயாவதி அறிவித்தார். மேலும் காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு முக்கியக் கட்சியான சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். 5 மாநில சட்டமன்ற தேர்தலை சமாஜ்வாதி கட்சி வேறு கூட்டணியில் இணைந்து சந்திக்கும் என்றும் கூறினார்.

தோழமை கட்சிகளின் அடுத்தடுத்த அறிவிப்புகள் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிகொள்ளச் செய்தன. இந்நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணியில் சிபிஎம் கட்சி இணையாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் அல்லாத 7 கட்சி கூட்டணியில் சிபிஎம் இணையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தெலங்கானாவில் பகுஜன் இடதுசாரி முன்னணியில் இணைந்து தேர்தலை அக்கட்சி சந்திக்கும் என்றும் சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத சிறிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை மார்க்ஸிஸ்ட் கட்சி சந்திக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தோழமை கட்சிகளின் இந்த திடீர் அறிவிப்பால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதே நேரத்தில் அக்கட்சி பலவீனமடைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் 5 சட்டமன்ற தேர்தல்களில் மட்டுமே இக்கட்சிகள் தனித்த கூட்டணியில் போட்டியிடவுள்ளன என்றும் நாடாளுமன்ற கூட்டணி குறித்து முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றே தெரிகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இக்கட்சிகள் இணைந்து ஓரணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்குமா அல்லது மாயாவது தலைமையில் 3வது கூட்டணி உருவாகுமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.