ஞாயிறு, 28 அக்டோபர், 2018

இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக மைத்ரிபால சிறிசேனா அறிவிப்பு! October 27, 2018

Image

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையின் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து, பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,  இலங்கையில் முன்பு அதிபராக இருந்த ராஜபக்சே, பிரதமராக பதவியேற்றார். அதிபர் மைத்திரிபால சிறிசேனா  அவருக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையின் 11-வது பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ளது, தமிழர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என்றும் நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை, தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கும் போது, மற்றொருவருக்கு பிரதமர் பதவியினை வழங்க, அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும் ரணில் கூறியுள்ளார். 

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம், பிரதமரை பதவி நீக்குதல், அல்லது பதவியினை ராஜினாமா செய்வதன் மூலம் மட்டுமே, புதிய பிரதமரை அதிபர் தேர்வு செய்ய முடியும் என்றும், ரணில் விக்கிரமசிங்கே குறிப்பிட்டுள்ளார். சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஏதுவாக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறும் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்துவரும் நிலையில், ரணில் விக்கிரமசிங்கே, மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களிலும் தாங்கள் தான் இலங்கையின் பிரதமர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்திலும் ரணில் விக்கிரமசிங்கே தான் அந்நாட்டின் பிரதமர் என குறிப்பிடப்பட்டுள்ளது.