திங்கள், 22 அக்டோபர், 2018

உலகில் நடந்த முக்கியமான ஏலங்கள்;

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இல்லம் ஏலம் விடப்பட்டுள்ளது. உலகில் நடந்த சில முக்கியமான ஏலங்களை குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு...

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி தனது போராட்டங்களுக்காக உலக அளவில் புகழ்பெற்றவர். மியான்மரின் சர்வாதிகார அரசை எதிர்த்து போராடியதற்காக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். 15 ஆண்டுகள் ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த வீட்டினை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீட்டை ஏலம் விடும் தொகையில் தனக்கும் பங்கு தர வேண்டும் என ஆங் சான் சூகியின் சகோதரர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். பிரபலமானவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை ஏலம் விடுவது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஏலம் விடப்பட்ட அந்தப் பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. 

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காந்தியின் பொருட்கள் இந்தியா வந்து சேர்ந்தன. தொழிலதிபர் விஜய் மல்லையா அந்தப் பொருட்களை ஏலம் எடுத்தார்.  காந்தியின் மூக்குக் கண்ணாடி மற்றும் கடிகாரம் ஆகியவற்றை 1.8 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தார் விஜய் மல்லையா. 

இவையெல்லாவற்றையும் விட விசித்திரமான ஏலம் ஒன்று அமெரிக்காவில் நடந்தது. ஸ்கார்லெட் ஜான்சன் அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர். கடந்த 2009ம் ஆண்டு ஸ்கார்லெட் ஜான்சன் நடிப்பில் THE SPIRIT படம் வெளியானது. அந்தப் படத்தின் பிரமோசனுக்காக 2008 டிசம்பரில் ஒரு தொலைக்கட்சி நிகழ்ச்சியில் ஸ்கார்லெட் ஜான்சன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது சளித் தொல்லை இருப்பதாக அவர் கூறியதை அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் டிஷ்யூ பேப்பர் ((Tissue Paper)) ஒன்றைக் கொடுத்தார். அதனைப் பயன்படுத்திய ஸ்கார்லெட் ஜான்சன் கீழே தூக்கி எறிந்தார். அதனை எடுத்த ரசிகர் ஒருவர் அந்த டிஷ்யூ பேப்பரில் ஸ்கார்லெட் ஜான்சனிடம் கையெழுத்து வாங்கினார். 

பின்னர் இ-பே இணையதளம் மூலம் அந்த டிஷ்யூ பேப்பர் ஏலம் விடப்பட்டது. ஸ்கார்லெட் ஜான்சன் பயன்படுத்திய அந்த டிஷ்யூ பேப்பர் 5,300 டாலருக்கு ஏலம் விடப்பட்டிருந்தது. அந்தப் பணம் அமெரிக்காவில் ஆதரவற்றவர்களுக்காக செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டது. 

புகழ்பெற்றவர்களின் பொருட்களை ஏலம் எடுப்பது அவர்களின் நினைவைப் போற்றுவதற்கு உதவுகிறது என்றால் ஸ்கார்லெட் ஜான்சன் போன்ற நடிகைகள் சம்பந்தப்பட்ட பொருட்களை ஏலம் விடுவது பல நல்ல காரியங்களுக்கு உதவுகிறது.