வியாழன், 25 அக்டோபர், 2018

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு, உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி October 24, 2018

Image

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு, உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க கோரி, பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலான சாலைகள்  அமைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறையினர் சாப்பிட கற்களும், மணல்களும் மட்டுமே மிஞ்சும் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 

இதையடுத்து வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், விவசாய நிலங்கள், ஏரிகள் போன்றவை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகிறது என்றும், இதை யாரும் எதிர்க்கவில்லை எனவும் கூறினார்.