திங்கள், 22 அக்டோபர், 2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இந்த வாரத்தில் தீர்ப்பு என எதிர்பார்ப்பு! October 22, 2018

Image

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில், 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த கூடாது என தனி நீதிபதி துரைசாமி இடைக்கால உத்தரவு பிறபித்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்ட போது, தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் வழக்கு 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், விசாரணையை முடித்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 31ம் தேதி ஒத்திவைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இந்த வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.