
நீர்நிலைகளில் சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதாக திராவிட விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஜனவரி 7ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இல்லையெனில், தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
source: ns7.tv