சனி, 29 டிசம்பர், 2018

1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது...” போலீசார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போட்! December 29, 2018


source ns7.tv

Image

பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது என போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் பரேலி பகுதியில் உள்ள காவல்நிலைய குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1000 லிட்டர் மதுவை போலீசார் வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை குடோனுக்கு சென்ற காவலர், மது பாட்டில்களில் இருந்த மது காலியாகி இருப்பதையும் அந்த பாட்டில்கள் மற்றும் கேன்கள் அருகே சில எலிகள் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த காவலர், பறிமுதல் செய்யப்பட்ட 1000 லிட்டர் மதுவையும் எலிகள் குடித்துவிட்டது என தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால், காவலரின் தகவல் அறிக்கையை நம்பாத உயர் அதிகாரிகள், உண்மையிலேயே மதுவை எலிகள் குடித்துவிட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
பறிமுதல் செய்யப்பட்ட மதுவில் சிறிது அளவு மட்டும் எடுத்துவைத்துக்கொண்டு மீதியை அழித்துவிடவேண்டும் என்றே போலீசாருக்கு கட்டளை விதிக்கப்பட்டிருக்கிறது எனவும் அதனை பின்பற்றாததால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். 
பேப்பர் மற்றும் துணிகளை மட்டுமே எலிகள் கடிக்கும் என்று கேள்விபட்டிருக்கும் நிலையில் இதுபோன்று 1000 லிட்டர் மதுவை எலிகள் குடிக்குமா என்ற கேள்வி பலரிடத்தில் இருக்கிறது.