சனி, 15 டிசம்பர், 2018

குவியல் குவியலாக கிடந்த மண்டை ஓடுகள்; அதிர்ச்சியில் உறைந்து போன ஊர் மக்கள்! December 14, 2018

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி செல்லும் வழியில் உள்ளது வக்கணம்பட்டி. இங்குதான் வைக்கோல் போரைப் போல் மனிதனின் மண்டை ஓடுகள் குவிந்துகிடக்கின்றன. சுடுகாட்டின் அருகே உள்ள சாலையின் இருபுறத்திலும் கஜா புயலில் விழுந்த தேங்காய்களைப் போல மண்டை ஓடுகள் குவியலாகவும் சிதறியும் கிடந்ததைப் பார்த்து அதிகாலை சாலையில் நடைபயிற்சி சென்ற பொதுமக்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். 
அருகருகே மூன்று இடங்களில் கிடந்த மண்டை ஓடுகள் மர்ம தேசம் போல் காட்சியளிக்க பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட  மண்டை ஓடுகளிலுமே பற்கள் வரிசையாக அணிவகுத்திருப்பதால் அவை அனைத்துமே முப்பது வயதிற்கு உட்பட்டோருக்கான மண்டை ஓடுகள் என்பதும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தது. 
மண்டை ஓடுகள் மட்டுமின்றி சரியாக நூற்றியோரு எண்ணிக்கையில் எலும்புடன் பிணைத்துக் கட்டப்பட்ட தாயத்துகளும் அதே பகுதியில் கிடந்ததும் அச்சத்தை அதிகரிக்க வைத்தது. அதுமட்டுமின்றி மல்லிகைப் பூக்கள், ஊதுவத்தி சாம்பிராணி என வேதாளங்கள் நிறைந்த மாய உலகத்தையே நமது கண்களின் முன் நிறுத்தியது அந்தக் காட்சி. கடந்த 6ஆம் தேதி வியாழக் கிழமை அமாவாசை முடிந்த நிலையில் அதையொட்டி மந்திரவாதிகள் மண்டை ஓடுகளை வைத்து மந்திர தந்திர வேலைகளைச் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள் பொதுமக்கள்.
மந்திரவாதிகள் ஊருக்கு கேடுவிளைவிக்கும் வகையில் மனித மண்டை ஓடுகள் வைத்து மாந்திரிக வேலையில் ஈடுபட்டார்களா? என்று கேள்வி எழுப்பும் அப்பாவி பொதுமக்கள் புதையல் ஏதேனும் எடுப்பதற்கு முன் மண்டை ஓடுகளை வைத்து பூஜை செய்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகளும் எப்படிக் கிடைத்தன, அவை யாருடைய மண்டை ஓடுகள், பலரையும் கொலை செய்து பிறகு இந்த மண்டை ஓடுகளைக் கொண்டு வந்தார்களா என்றும் நூற்றுக் கணக்கான கேள்விகள் முளைத்துள்ளன. அல்லது நரபலி கொடுத்து இத்தனை மண்டை ஓடுகளும் சேகரிக்கப்பட்டதா என்றும் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் இதுகுறித்து பொதுமக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மண்டை ஓடுகளைக் குழி தோண்டி புதைத்துள்ளனர். அத்துடன் தங்களின் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து போலீசார் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டும் பொதுமக்கள் மண்டை ஓடுகளுக்குப் பின்புறம் இருக்கும் மர்மம் என்ன என்பதை போலீசாரும் அதிகாரிகளும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். 
மூட்டை மூட்டையாக மண்டை ஓடுகள் குவிந்து கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

source: ns7.tv
Image