வியாழன், 27 டிசம்பர், 2018

அஸ்ஸாமில் சூடு பிடிக்கும் எலிக்கறி விற்பனை..

Image

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குமரிகட்டா பகுதியில், எலிக்கறி விற்பனை மிக தீவிரமாக நடந்துவருகிறது.
குமரிகட்டா பகுதியில் உள்ள வவிவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் இருக்கும் எலிகளை பிடித்துவந்து, அதன் தோலை உரித்து, காரசாரமான மசாலா தடவி விற்பனை செய்துவருகின்றனர். கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறியை விட எலிக்கறி அதிக அளவில் விற்பனையாகிறது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில், ஒரு கிலோ எலிக்கறி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், அப்பகுதி மக்கள் அனைவரும் விரும்பி வாங்கிச்சென்று உண்கின்றனர். தேயிலை தோட்டத்தில் பகல் நேரத்தில் வேலை செய்யும் விவசாயிகள், இரவு நேரங்களில் எலி பிடிக்க சென்றுவிடுகின்றனர். எலிகளை பிடிப்பதற்காக மூங்கிலால் செய்யப்பட்ட பிரத்யேக கூடுகளை பயன்படுத்துகின்றனர்.
ஒரு சில எலிகள், ஒரு கிலோவிற்கும் அதிகமான எடை உடையதாக இருக்கும் எனவும் ஒரு நாளைக்கு குறைந்தது 10லிருந்து 20 கிலோ எலிக்கறி விற்பனையாகும் எனவும் தெரிவித்தனர். எலிகளை பார்த்து பயப்படுவோர் இருக்கும் நிலையிலும், எலிகளை பிடித்து அதனை சமைத்து சாப்பிடுவது பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
அஸ்ஸாமில், தேயிலை தோட்டத்தில் மட்டும் வேலை பார்த்து போதிய வருமானம் இல்லாமல் திணறும் மக்களுக்கு இந்த எலிக்கறி விற்பனை கைகொடுக்கிறது. குறிப்பாக, அங்குள்ள பழங்குடியினரே அதிகமாக இத்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். 
source ns7.tv