புதன், 17 ஏப்ரல், 2019

குஜராத்தி மொழியில் இந்தியர்களுக்கு இங்கிலாந்தில் எச்சரிக்கை! April 17, 2019


பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்து நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய மொழியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் எச்சில் துப்புவதை பார்ப்பது நமக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. எச்சில் என்பதோடு மட்டுமில்லாமல் புகையிலை மற்றும் பான் பொருட்களை மென்றுவிட்டு அதை துப்பும் போது செக்கச்செவேலென கறை படிந்திருப்பதை சுவர்களிலும், சுரங்க நடைபாதைகளிலும், பஸ்/ரயில் நிலையங்களிலும் இதர பொது இடங்களிலும் நம்மால் பார்க்க இயலும்
இது போன்ற நிகழ்வுகள் நம் நாட்டில் மட்டுமல்ல சுகாதாரத்தில் முன்னேறிய நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்திலும் இருந்து வருகிறது. ஆனால் அதற்கும் இந்தியர்களே பெரும்பான்மையான காரணம் என்பது நமக்கெல்லாம் சிறிது நெருடலான விஷயாகவே உள்ளது.
இங்கிலாந்தில் Leichester நகர தெருக்களில் ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளில் பான் எச்சிலை தெருக்களில் துப்புவது சுகாதாரத்திற்கு மட்டும் கேடல்ல சமூகத்திற்கும் கேடானது என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் எச்சில் துப்புபவர்களுக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் 13,000 ஆயிரம் ரூபாயாகும்) இதன் மூலம் இந்த எச்சரிக்கை இந்தியர்களுக்கானது என்பது உணர்த்தப்படுகிறது.
Leichester நகர நிர்வாகத்தினருடன் இணைந்து காவல்துறையினர் வைத்துள்ள இந்த எச்சரிக்கை பலகைகள் Spinney Hills,North Evington, Belgrave போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.
இங்கிலாந்தில் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள பகுதிகளில் ஒன்றாக Leichester உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 நிலவரப்படி பான் கறைகளை சுத்தம் செய்வதற்காக மட்டும் நகர நிர்வாகத்தினர் 20,000 யூரோக்களை செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் சுமார் 12 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர், இதில் குஜராத்திகளின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

source ns7.tv