வெள்ளி, 12 ஏப்ரல், 2019

தமிழ்நாட்டை ஆர்எஸ்எஸ் மூலம் ஆள விடமாட்டோம்: ராகுல் காந்தி April 12, 2019


Image
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் செல்லக்குமார், ஓசூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது என்றார். நாட்டில் உள்ள விவசாயிகள் மத்தியில் உள்ள அச்சத்தை காங்கிரஸ் அகற்றும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் போடப்படும் என்றும் உறுதி அளித்தார். 
தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன் எனக் கூறி மக்களை பிரதமர் மோடி ஏமாற்றினார் என்றார். தமிழ்நாட்டை ஆர்எஸ்எஸ் மூலம் ஆள விடமாட்டோம் என ராகுல்காந்தி சூளுரைத்தார். தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என குறிப்பிட்ட ராகுல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.